அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டணம் 10 மடங்கு கட்டணம் உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

சான்றிதழ் கட்டணங்களை 10 மடங்கு அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் சான்றிதழ் கட்டணம் 10 மடங்கு கட்டணம் உயர்வு - மாணவர்கள் அதிர்ச்சி

அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பட்டப்படிப்பு சான்றிதழ்களில் திருத்தம் செய்யவோ, மறுசான்று பெறுவதற்கோ வசூலிக்கப்படும் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய கட்டணங்களில், கிரேடு மதிப்பெண் நகல் சான்றிதழை பெறுவதற்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், பட்டப்படிப்பு நிறைவு செய்ததற்கான நகல் சான்றிதழை பெறுவதற்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதுவே 2-வது முறை நகல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், அதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது.

மேலும், இந்தியாவிற்குள் உள்ள நிறுவனங்களின் சான்றிதழ் உண்மைத்தன்மை குறித்து அறிய 2 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 23 பணிகளுக்கான கட்டணத்தை கிடுகிடுவென உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டணம் கடந்த 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.