ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர் : கால்கோள் ஊன்றும் விழா தொடக்கம்!!

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியின் முக்கிய நிகழ்வான கால்கோள் ஊன்றும் விழா கிராம மக்கள் முன்னிலையில் தொடங்கியது. 

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர் : கால்கோள் ஊன்றும் விழா தொடக்கம்!!

மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள்  தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி-14. அவனியாபுரத்திலும் ஜனவரி-15. பாலமேட்டிலும் ஜனவரி-16. அலங்காநல்லூரிலும் வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டி  ஜனவரி 16ம் தேதி நடை பெறவுள்ள நிலையில் இன்று காலை அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில்  ஜல்லிகட்டு போட்டிக்கான பணியின் முக்கிய நிகழ்வான கால்கோள் விழா இன்று அதிகாலை 5.30  மணியளவில் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் பீடத்தின் முன் அலங்காநல்லூர் ஜல்லிகட்டுவிழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் ஜல்லிகட்டு போட்டி தொடங்குவதற்கான கால்கோள் ஊன்றும் விழா எளிமையாக நடைபெற்றது.

இதன் பின்னர் அடுத்தகட்டமாக வாடிவாசல் தயார் செய்யும் பணி, ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி, ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு செய்யும் பணிகள் தொடங்க உள்ளன. இந்தாண்டு நடைபெறும் ஜல்லிகட்டு போட்டி தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி எளிமையாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும். அதேபோல் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விழாவில் வீரர் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு முதல்பரிசாக கார், இருசக்கர வாகனம்,  டிவி, தங்ககாசு, உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விழாக்கமிட்டியினர் பேசியபோது :

இந்தாண்டு அரசு கூறும் வழிமுறைகள்படி முறையாக நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசு பரிசாக வழங்க உள்ளோம் தமிழக அரசு என்ன அறிவிப்பு வழிமுறைகளை கூறுகிறதோ அதன்படி ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் என விழா கமிட்டி தலைவர் ரகுபதி கூறினார்.