அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்...  10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...

கடலூரில் உள்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மோதல்...  10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. 2-ம் கட்ட அமைப்பு தேர்தல் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உள்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த நகர துணை செயலாளர் கந்தனுக்கும், சேவல்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்த முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், விரைந்து சென்று இருவரையும் சமாதானப்படுத்தினார். இதனையடுத்து, சேவல்குமார் புறப்பட்டு சென்ற காரை, கண்ணிமைக்கும் நேரத்தில் கந்தன் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

இதில் கார் கண்ணாடி உடைந்தது. இதனை சற்றும் எதிர்பாராத சேவல்குமாரின் ஆதரவாளர்கள், ஓடி சென்று தகராறில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருதரப்பை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.