அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் மேல்முறையீடு!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈபிஎஸ் மேல்முறையீடு!!

கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, வரும் 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தற்போது, ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள 10க்கும் அதிகமானோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், கட்சி செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல என்றும், பொதுக்குழுவில் கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி ஜனநாயக முறைப்படி எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, ஈபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.