அடிப்பம்பை அகற்றாமல் கான்கிரீட் போட்ட அதிமுக ஒப்பந்ததாரர்...! நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை..!

ராசிபுரம் அடுத்த பட்டணம், முனியப்பன் பாளையம் பகுதியில் உள்ள சாலையில் கான்கிரீட் பணியின்போது, அடிப்பம்பை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் போட்ட, அதிமுக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்பம்பை அகற்றாமல் கான்கிரீட் போட்ட அதிமுக ஒப்பந்ததாரர்...! நடவடிக்கை எடுக்க  மக்கள் கோரிக்கை..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம், முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில், கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல், அலட்சியமாக அப்படியே போடப்பட்டுள்ளது. மேலும் இந்த கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அதிமுகவைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டதற்கு ஒப்பந்ததாரர் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. 

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அடிப்பம்பு மூலம் குடிநீர் எடுத்து வந்ததாகவும், சிறிய கோளாறு காரணமாக அடிப்பம்பை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது,  வேறு ஒரு குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என கூறியதாகவும் ஆனால் அதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும்  கூருக்கின்றனர். அடிபம்பை அகற்றாமல் அலட்சியமாக கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.