பட்டா கத்தியை காட்டி கிராம மக்களை மிரட்டும் வாலிபர்- வீடியோ வைரல்...

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பட்டா கத்தியுடன் கிராமத்தை வலம்வந்து மக்களை மிரட்டும் பட்டாகத்தி வாலிபரால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

பட்டா கத்தியை காட்டி கிராம மக்களை மிரட்டும் வாலிபர்- வீடியோ வைரல்...

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையில் மானத்தாள் ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஓலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். லாரி ஓட்டுனரான இவர், கிரமத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களை செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. 

இவர் விதவிதமான பட்டா கத்தியை வைத்து கொண்டு கிராமத்தில் உள்ள மக்களை மிரட்டியபடி உலா வந்து கொண்டிருப்பதும் வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் பட்டா கத்தியுடன் நள்ளிரவில் ஊருக்குள் உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ராம்குமாருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராம்குமார், தனது வீட்டில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்துக்கொண்டு அவர்களை ஓட ஓட விரட்டியுள்ளார்.

அவர்கள் தப்பி பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளனர். இதனால், பயந்துபோன பழனிசாமியின் மனைவி தங்கமணி, நடந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள ராம்குமாரை தேடி வருகின்றனர். தொடர்ந்து கிராம மக்களை பட்டா கத்தியுடன் வந்து அச்சுறுத்தி வரும் ராம்குமாரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், தொளசம்பட்டி போலீசார், ராம்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டு, அவரை கைது செய்வதில்  மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.