கடற்கரையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை...! சரிசெய்யப்பட்டு நாளை திறப்பு...!

கடற்கரையில் சேதமடைந்த  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை...! சரிசெய்யப்பட்டு நாளை திறப்பு...!

மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை, முழுவதும் சீர் செய்யப்பட்டு நாளை திறக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்தது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை 260 மீட்டர் நீளமான கடற்கரையாகும். ஆமைகள் கடல் பரப்பிற்கு வந்து முட்டை இட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும். இதன் காரணமாக சிமெண்ட், கான்கீரிட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை எழுப்ப முடியாது என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டுதான் கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என்பதாலும், அனுமதி பெற்றுதான் இந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீர் செய்யப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சீர் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முழுவதுமாக சீரமைக்கப்பட்டு நாளை மீண்டும் பாதை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்...! என்ன காரணம்..?