குடும்ப வறுமை காரணமாக பெற்ற குழந்தையையே 5 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!

குடும்ப வறுமை காரணமாக பிறந்து 5 நாட்களே ஆன ஆண் பச்சிளம்குழந்தையை தாயே 5 ஆயிரத்துக்கு விற்ற கொடுமை திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

குடும்ப வறுமை காரணமாக பெற்ற குழந்தையையே 5 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் - சந்திரா தம்பதி. நம்பிராஜன் கூலி வேலை செய்தும், சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்தும் தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இப்படி வறுமையில் தவித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று சந்திர கையில் குழந்தையின்றி காணப்பட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சந்திராவிடம் குழந்தை எங்கே என்று விசாரித்து உள்ளனர். ஆனால் அதற்கு உரிய பதிலை சந்திரா அளிக்கவில்லை. இதனால் அச்சமடைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை காணவில்லை என மப்பேடு போலீசில் புகார் செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், சந்திராவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிறந்து 5 நாட்களே ஆன தன்னுடைய குழந்தையை தன்னுடன் வேலை பார்க்கும் ஜெயிந்தியிடம் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஜெயிந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டு, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.