தீக்குளித்து தற்கொலை செய்த 9ஆம் வகுப்பு மாணவி... தேர்வு பயத்தினால் செய்த முடிவா..?
புதுச்சேரியில் தேர்விற்கு பயந்து 9 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் செந்தில் முருகன், பெயிண்டர் வேலை செய்யும் இவர் தனது மனைவி மற்றும் மகள் உடன் வசித்து வருகிறார். இவரது மகள் ரேஷ்மா, அரசு பள்ளியில் ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி செந்தில் பணி முடித்து விட்டு வீடு திரும்பிய போது அவரது மகள் உடல் முழுவதும் தீயிட்டு கொண்டு வீட்டு மாடியில் இருந்து கீழே வந்துள்ளார். இதனை பார்த்த செந்தில் தனது மகளை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வு எழுதுவதற்கு பயந்து கொண்டு மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.