6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்- பதைபதைக்கும் சிசிடிவி....

திருப்பூரில் 6 வயது சிறுவனை ஐந்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்- பதைபதைக்கும் சிசிடிவி....

திருப்பூர் - தாராபுரம் சாலை, தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ள இவருக்கு ஆறு வயதில் பிரகதீஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை ஐந்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் துரத்தி சென்று கடித்து குதறியவாறே தூக்கி சென்றன.

இதனை கண்ட அருகிலிருந்தவர்கள், தெரு நாய்களின் பிடியில் இருந்த சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பிரகதீஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது என்றும் இந்த தெருநாய்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன என்றனர்.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளியங்காடு, குப்பாண்டம்பாளையம், கோவில்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையானது அதிகரித்து காணப்படுவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.