3-ம் கட்டமாக 27 தமிழர்கள் சென்னை வருகை!!

இஸ்ரேலில் இருந்து 3-ம் கட்டமாக 27 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலில் உள்ள சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்ப ‘ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 4 சிறப்பு விமானங்களில் 274 பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். 

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 3-ம் கட்டமாக மீட்கப்பட்ட 27 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 110 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக கூறினார். வருங்காலங்களில் இது போன்ற போர் மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் சமயத்தில் அவர்களை பாதுகாக்க  விரைவில் புதிய இணையதளம் தொடங்கப்படும் என குறிப்பிட்டார். 

மேலும் தமிழர்கள் யாரேனும் இருக்கிறார்களா, அங்கு இருக்கக்கூடியவர்கள் யாரும் திரும்பி வர விரும்புகிறார்களா என்பதை அயலக தமிழர்கள் துறை சார்பாக தகவல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அயலக அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.