ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் - 6 பேர் கைது...!!

தூத்துக்குடியில் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ போதைபொருளை பறிமுதல் செய்தனர்.

ரூ.21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் - 6 பேர் கைது...!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைத்து போதைப்பொருள் கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனிப்படையினர் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வந்தனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த மூவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர்கள் அன்சார் அலி , மாரிமுத்து, இம்ரான் கான் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புழக்கத்திற்காக வைத்திருந்த 162 கிராம் ஹெராயின் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட  3 பேரிடமும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி முத்து, பிரேம் என்ற பிரேம் சிங் , கசாலி  ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.