தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு செம்மரம் வெட்ட வந்த 5 சிறுவர்கள் உள்பட 21 பேர் கைது...
செம்மரம் வெட்ட தமிழகத்தில் இருந்து திருப்பதி வந்த 5 சிறுவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கடப்பாரை, கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பதியில் செயல்பட்டு வரும் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று அதிகாலை புத்தூரை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த ஒரு லாரியை சோதனையிட்டபோது 20க்கும் மேற்பட்டோர் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் சேஷசாலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டுநர் உள்பட 21 பேரை கைது செய்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் 5 பேர் சிறுவர்கள் என்பதும் இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனபதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து கடப்பாரை, கோடாரி மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவர்களை செம்மரம் வெட்ட அழைத்து வந்த ஜமுனாமத்துரை சேர்ந்த மேஸ்திரி அமரேசனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.