திருப்பூரில் 2000 ஆண்டு பழமையான 45 அடி உயர நடுகல் கண்டுபிடிப்பு..!

திருப்பூரில் 2000 ஆண்டு பழமையான  45 அடி உயர நடுகல் கண்டுபிடிப்பு..!

திருப்பூர் அடுத்த குமரிக்கல்பாளையத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, சுடு மண்ணால் தயாரிக்கப்பட்ட வட்ட சில்கள், அம்பு வடிவ குறியீடு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே குமரிக்கல்பாளையம் கிராமத்தில் உலகிலேயே 45 அடி உயரமான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் , இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானை முதுமக்கள் தாழிகள், இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் நடுக்கல் உள்ளன.

எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள கல்வெட்டியல் , மரபு மேலாண்மை பட்டய படிப்பு பொறுப்பு ஆசிரியர் - மத்திய பல்கலை கழகம் திருவாரூர் ச. ரவி, வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

திருப்பூர் மாவட்டம், குமரிக்கல்பாளையம் பகுதியில் நடத்திய ஆய்வில் பல திடுக்கிடும் வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன.உலகிலேயே 45 அடி உயர நடுகல் இங்கு இருப்பதால் நாகரீக பண்பாடு, வீரம் சொரிந்த மக்கள் வாழ்ந்ததற்கான இடமாக இருந்துள்ளது,இங்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 10 கல்வட்டங்கள் கிடைத்துள்ளன. பண்டைய மனிதர்கள் வணங்கக்கூடிய இடமாகவும்,இறந்தவர்களை வணங்கக்கூடிய பண்பாடு பறைசாற்றும் வகையில் இறந்த மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டு கல்வட்டங்களாக வழிபடும் இடங்களாக இருந்துள்ளது.

பண்டைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள், அடையாளச் சின்னங்கள் உள்ளன,அணிகலன்கள் தயாரிக்க கூடிய பணியில் இந்த பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன,சுடுமண் கலையில் தேர்ச்சி பெற்ற மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. உலகிலேயே மிக உயரமான 45 அடி உயரம் கொண்ட நடுகல் உள்ளன. 2000-ம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், 10 -கல்வட்டங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

மேலும் சூடு மண்ணால் தயாரிக்கப்பட்ட வட்ட சில்கள்,அம்பு வடிவ குறியீடுகள்,இரும்பு கசடுகள் கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவிற்கு அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்; முழுவதும் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் குறியீடுகளை மீட்டெடுக்க முடியும்,தமிழர்களின் பண்பாடு கொங்கு நாட்டு மக்களின் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும்; நம் முன்னோர்கள் வரலாறு , பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கிடைக்கும் " என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க    | ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் 'மிதவை உணவக கப்பல்' !