ஆசிரியர் திட்டியதால் 11ம் வகுப்பு மாணவன் மாயம்... பள்ளி வாயிலில் படுத்து உருண்டு கதறிய பெற்றோர்...

ஆசிரியர் திட்டியதால், பள்ளியில் இருந்து காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

ஆசிரியர் திட்டியதால் 11ம் வகுப்பு மாணவன் மாயம்... பள்ளி வாயிலில் படுத்து உருண்டு கதறிய பெற்றோர்...

ஈரோடு அடுத்த எல்லப்பாளையத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் வெங்கடாச்சலம்- சத்தியா தம்பதியினரின் மகன் பிரசாந்த்,  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு பயின்று வருகிறான். வழக்கம் போல் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவன், பள்ளியில் இருந்து திடீரென மாயமானான். அரையாண்டு தேர்வில் காப்பியடித்து எழுதியதை கண்டித்த ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து முட்டி போட வைத்ததாகவும், இதனால் மாணவன் சுவர் ஏறி குதித்து தப்பி தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. 

போலீசாரும், உறவினர்களும் இரவு முழுவதும் தேடியும் மாணவன் கிடைக்காத நிலையில், பள்ளி முன்பாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் பெற்றோர் பள்ளி வாயிலில் படுத்து உருண்டு கதறி அழுதனர்.  பள்ளிக்கு வந்த மாணவன் காணாமல் போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என  உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

தவறு செய்த மாணவன் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கலாம் என்றும், மாணவனை தாக்கிய ஆசிரியரிடம் விசாரிக்கவும்  வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய போலீசார் மாணவனை கண்டுபிடித்து தருவதாக கூறி அவர்களை கலைந்து போக செய்தனர்.