20 இடங்களில் சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது....சுமார் 50 சவரன் தங்கம் பறிமுதல்.
தமிழகம், புதுச்சேரி உட்பட 20 இடங்களில் தொடர் சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் செல்லும் பெண்களை குறிவைத்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார், தனிப்படை அமைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இதற்கிடையில் சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் பாண்டிசேரியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், சென்னையை சேர்ந்த தினேஷ்குமார், உத்திரமேரூர் சிவக்குமார், மதுரையை சேர்ந்த கருப்புசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 50 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தினேஷ்குமார் மீது கொலை மற்றும் கொள்ளை என 40 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெண் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.