புதுச்சேரியில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லையா…உண்மை என்ன?

புதுச்சேரியில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லையா…உண்மை என்ன?

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளது

சட்டப்பேரவைத்தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பாக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளை திறப்போம் என்று கூறியவர்கள் தற்போது வரை திறக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் அரிசிக்கு பதில் வங்கிக்கணக்கில் செலுத்திய பணத்தையும் பயனாளிகளுக்கு தருவதை நிறுத்தி விட்டதாக கூறிய அவர் அண்டைமாநிலங்களான தமிழகம், கேரளத்தில் ரேஷனில் பொருட்கள் தரும் நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டிலேயே புதுச்சேரியில் தான் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும்,

ரேஷன் பொருட்களை வழங்காத புதுச்சேரி அரசு

ரேஷனில் பொருட்கள் தர ஒதுக்கப்பட்ட நிதியை வெள்ள நிவாரணத்துக்கு தந்துவிட்டதாக முதல்வர் தெரிவிக்கும் சூழல் உள்ளதாக பேசினார். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ரேஷனில் பொருட்கள் தரும் வரை வலுவான இயக்கத்தை சிபிஎம் முன்னெடுக்கும் எனவும் ஜி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார் ரேஷன் கடைகளில் பணம் போடுவதா அரிசி போடுவதா என்பது குறித்தான கருத்து கேட்டு கூட்டத்தை கட்சியினருக்கோ, ஊடகத்துக்கோ, மக்களுக்கோ அறிவிக்காமல் தனது தொகுதி மக்களை மட்டும் அழைத்து வந்து ரேஷன் கடை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்தும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார்.

பிரச்சார பயணம்

இதனால், மாநில உரிமை மீட்போம் - புதுச்சேரி மக்கள் நலன் காப்போம் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கிலோ மீட்டர் பிரசார நடைபயணம் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற உள்ளதாக அவர் கூறினார். மத்திய அரசு ஆசிரியர் தினத்தன்று கல்வித்துறைக்கு ரூ. 27 ஆயிரம் கோடியை ஒதுக்கி, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் புதிய திட்டநிதி ஒதுக்கீடு இல்லை என மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர்,  பாஜகவைத் தோற்கடிக்க அகில இந்திய அளவில் ஒரே அணியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வருவது அவசியம். ஒன்றிய அளவில் இல்லாவிட்டாலும் மாநில அளவில் ஒருங்கிணைந்து வெல்ல வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம் என்று பேசினார்.