பள்ளிகளில் கட்டண கொள்ளை...அதிமுக குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45% பள்ளி கட்டண உயர்வு அதிகரித்துள்ளது

பள்ளிகளில் கட்டண கொள்ளை...அதிமுக குற்றச்சாட்டு!

புதுச்சேரியில்  குறிப்பிட்ட சில பள்ளிகளில் அதிக கட்டணத்தை அரசு நியமித்து உள்ளதை உடனடியாக ரத்து செய்து பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு ஒரு நாடகம்

புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், இந்தி திணிப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல் ஆகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மத்தியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தியா முழுவதும் இந்தி மொழியை கொண்டு செல்லவும், இணைப்பு மொழியாக இந்தியை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக கொண்டு வர நாடாளுமன்றத்தில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது மத்திய அரசு கீழ் இயங்கும் அனைத்து துறைகளிலும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

மருத்துவக் கல்வி

புதுச்சேரியில் இன்று வரை தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத்தின் படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 50 சதவீத இடத்தினை பெறவும், அதற்கான கட்டணத்தையும் நிர்ணயிக்கவும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு அரசின் இடஒதுக்கீடாக எத்தனை இடங்கள் என அறிவிக்கப்படவில்லை என்று கூறிய அவர், மருத்துவ கல்வியில் கல்வி கட்டணம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக்குழு தலைவராக உள்ளவர் ஒருதலைப்பட்சமாகவும், மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்.  

கட்டண கொள்ளைக்கு துணை போகும் அரசு

எனவே அக்குழுவின் தலைவரை மாற்றம் செய்து வேறு ஓய்வுபெற்ற நீதிபதியை அரசு நியமனம் செய்து மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதில் துணைநிலை ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.

அரசுப் பள்ளியில் படித்து முடித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களில் ஒருவருக்கு மட்டும் தான் இந்த கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர்,  தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளைக்கு அரசு துணை போவது சரி இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45% பள்ளி கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக அரசு ரத்து செய்து பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.