தேசிய விலங்காக பசு அறிவிக்கப்படுமா?!
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு சாரா அமைப்பான கோவன்ஷ் சேவா சதன் மற்றும் பலர் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்று நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி அபய் எஸ்.ஓகா ஆகியோர் மனுதாரரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மனுதாரரை கண்டித்த அமர்வு, ”இது நீதிமன்றத்தின் வேலையா? அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், ஏன் மனு தாக்கல் செய்கிறீர்கள்? எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், எதிர்மறையான முடிவைப் பொருட்படுத்தாமல் இதைச் செய்ய வேண்டுமா?” என்று நீதிபதிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், பசு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். அபராதம் விதிக்கப்படும் என வழக்கறிஞரை எச்சரித்த பின்னர் மனு வாபஸ் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.