எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா லலித்!!!!
உச்ச நீதிமன்றத்தில் மட்டும் இதுவரை 71 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் யு.யு. லலித். முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா சிறப்பாக செயல்படுவார் என்ற நிலையில் சிறிது ஏமாற்றமே மிஞ்சியது. அவரைத் தொடர்ந்து ரமணாவால் பரிந்துரை செய்யப்பட்ட யு.யு. லலித் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
மிகக் குறைந்த பதவிக்காலம்:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு. யு. லலித்தின் பதவிக்காலம் 74 நாட்களே உள்ளது. ஆனால் அவர்முன் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
சிறப்பான பணியாற்றுவேன்:
”நான் பொறுப்பேற்றபோது அனைவரின் கண்களும் என்மீதே இருந்தன. என்னிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதை அவை அறிவிப்பதாக இருந்தன. அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். விரைவாக செயல்பட்டு அதிக அளவிலான நிலுவை வழக்குகளுக்கு தீர்வு வழங்குவேன்” என நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார் லலித்.
நான்கு நாள்களில் முடிக்கப்பட்ட வழக்குகள்:
”கடந்த நான்கு நாட்களில் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் பொறுப்பேற்ற பின்பு அதிகமான வழக்குகளை பட்டியலிட்டுள்ளோம். அவை முந்தைய காலத்தை விட அதிகமானவை. மேலும் கடந்த நான்கு நாட்களில் முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,293 ஆகும்” எனவும் கூறியுள்ளார் லலித்.
நம்பிக்கையை ஏற்படுத்துவாரா லலித்:
தொடர்ந்து பேசிய லலித்”நீதிமன்றங்கள் தற்போது வழக்குகளை தீர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான இடமாற்ற மனுக்கள் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான வழக்குகளை முடிக்க தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம். நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற சிறப்பாக செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார் லலித்.
இதையும் படிக்க: ஆர்டிஐ கேள்விகளுக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதிலளித்தால்.....!!!