" பிரதமர் மோடி மணிப்பூர் முதலமைச்சர் ’பைரான் சிங்’கை காப்பாற்றுவது ஏன்? ” - கவ்ரவ் கோகாய் கேள்வி.

" பிரதமர் மோடி மணிப்பூர் முதலமைச்சர் ’பைரான் சிங்’கை  காப்பாற்றுவது ஏன்? ” - கவ்ரவ் கோகாய் கேள்வி.

பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மக்களவையில் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி, காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகாய், விவாதத்தை தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ஒப்புதல் அளித்ததை அடுத்து, இன்று முதல் 3 நாட்கள் இதன்மீது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதேபோல், அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்தை அடுத்து, மீண்டும் மக்களவைக்கு வருகை தந்துள்ள வயநாடு எம்.பி. ராகுல் காந்தி விவாதம் மீது உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

மணிப்பூர் விவகாரம்; "பிரதமர் மெளனம் ஏன்?" காங்கிரஸ் எம்.பி.கேள்வி !

இந்நிலையில், மக்களவை இன்று காலை 11 மணி அளவில் கூடியபோது,  கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், பிரதமர் உரிய விளக்கம் அளிக்கக்கோரி எதிர்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திக்கப்பட்டது. 

முன்னதாக, சீனா உடனான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

பின்னர், 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது ராகுல் காந்திக்கு மாற்றாக, காங்கிரஸ் கட்சியின் கவ்ரவ் கோகாய், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, மணிப்பூர் மாநிலத்தை பற்றி பேசுவது ஒட்டுமொத்த இந்தியா குறித்து பேசுவதற்கு சமம் என்றார். 

மேலும், மத்திய அரசை நோக்கி மூன்று கேள்விகளை அவர் முன் வைத்தார். அதன்படி, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் ஏன் செல்லவில்லை என்ற அவர், மணிப்பூர் குறித்து பிரதமர் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என்றும் வினவினார். மணிப்பூர் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு, அவர் மீது கரிசனம் காட்டுவது ஏன் ? என்றும் சரமாரி கேள்வி எழுப்பினார். எப்போதும் இரட்டை என்ஜின் சக்தியுடன் செயல்படுவதாக கூறும் பாஜ.க. அரசு, மணிப்பூரில் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்தார். 

இதேபோல் மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருக்கை அருகே சென்ற உறுப்பினர்கள், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி கூச்சல் எழுப்பினர். 

அப்போது, 267 சட்டத்தின்கீழ் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டெரெக் ஓ பிரெய்ன் அமளியில் ஈடுபட்டார். அவைத் தலைவரின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து குரல் எழுப்பியதால் அவரை இந்த தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர், மீண்டும் அவை கூடியபோது மீண்டும் கூச்சல் - குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 12.45 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிக்க   |  வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற நிதியை பயன்படுத்தாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!