ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி... 10ஆம் தேதியில் இருந்து முதல் பூஸ்டர் டோஸ்...

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள்  அச்சமடைய வேண்டாம் என கேட்டுக கொண்டுள்ளார்.

ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி... 10ஆம் தேதியில் இருந்து முதல் பூஸ்டர் டோஸ்...

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும்  நிலையில், பல்வேறு மாநிலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2022ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கும் நம்மை விட்டு கொரோனா இன்னும் போகவில்லை என்றும், தற்போது பண்டிகை காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

12 மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி, தற்போது 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 61 சதவீதம் மக்கள் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தரகாண்ட், டெல்லி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது நமது சுகாதார கட்டமைப்பின் வலிமையை காட்டுகிறது என்றும், நமது தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையிலானது என்றும் கூறினார். அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்ட பிரதமர் மோடி, அதேசமயம் ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள்  அச்சமடைய வேண்டாம் என தெரிவித்தார்.

தடுப்பூசியின் பலன்கள் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஜனவரி 3ம் தேதி முதல், 15 வயதில் இருந்து 18 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி பத்தாம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.