தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!!

இந்தியாவில் தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 150 கோடியே 63 லட்சத்து 30 ஆயிரத்து 265 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.  அவற்றில் 88 கோடியே 23 ஆயிரத்து 92 பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். 62 கோடியே 63 லட்சத்து 7 ஆயிரத்து 173 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியில் 150 கோடி தடுப்பூசி என்ற சாதனையை தாண்டிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது தடுப்பூசி திட்டம் நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அதேவேளை, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். 

நமது தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக செல்ல பணியாற்றும் அனைவருக்கும் இந்தியா வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.