சுற்றி வளைக்கிறதா ஒமிக்ரான்..?  நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு...

இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

சுற்றி வளைக்கிறதா ஒமிக்ரான்..?  நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்வு...

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லத்தூரில் ஒருவருக்கும், புனேவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைப்போல குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த சூரத் நகரை சேர்ந்தவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும், குஜராத்தில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும், சண்டிகர், ஆந்திரா மற்றும் கேரளாவில் தலா ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.