மருத்துவ மேற்படிப்பு - பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!!
முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10 சதவீத இடங்களை ஒதுக்க, மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என கூறி, மத்திய அரசின் ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வருவாய் உச்சவரம்பு, 8 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உச்சநீதிமன்றம் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர். நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு இறுதி தீர்ப்பை அறிவிக்க உள்ளனர். இதனால் மத்திய அரசு பிறப்பித்த ஆணை செல்லுபடியாகுமா? என்பது குறித்து இன்று காலை தெரிய வரும்.