லக்கிம்பூர் வன்முறை சம்பவம்... குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து முறையிடுகிறது காங்கிரஸ் குழு...

லக்கிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இன்று முறையிட திட்டமிட்டுள்ளனர்.

லக்கிம்பூர் வன்முறை சம்பவம்... குடியரசுத் தலைவரை இன்று சந்தித்து முறையிடுகிறது காங்கிரஸ் குழு...

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூருக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, அம்மாநில துணை முதலமைச்சர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதி நேரம் கோரப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரம் ஒதுக்கியதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 11:30 மணியளவில் கோரிக்கை மனுவை வழங்க உள்ளனர்.

இந்த குழுவில் ராகுல், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஆஷிஷ் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் குழுவினர் முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.