"உண்மையைக் கூட மணிப்பூர் அரசு திரித்துக் கூறுவதாக கண்டிப்பு" உச்சநீதிமன்றம் கண்டனம்!!

"உண்மையைக் கூட மணிப்பூர் அரசு திரித்துக் கூறுவதாக கண்டிப்பு" உச்சநீதிமன்றம் கண்டனம்!!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பம் குறித்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது.

இம்பாலுக்கு அருகே கடந்த மே 3ம் தேதி குகி பழங்குடியினப் பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கை பதிவு செய்ய 14 நாட்களை போலீசார் எடுத்துக் கொண்டது ஏன் எனவும் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பியது.

அதற்கு போலீசாரே கொடூரத்திற்கு துணைசென்று குடும்பத்தினரைக் கொல்ல அனுமதித்ததாக மனுதாரர் தரப்பில் ஆஜராகிய கபில்சிபல் தெரிவித்தார். இதனை உள்வாங்கிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உண்மையைக் கூட மணிப்பூர் அரசு திரித்துக் கூறுவதாக கண்டிப்புடன் கூறினார். மேலும் நிர்பயா வழக்கை விட மோசமான முறையில் மணிப்பூர் விவகாரம் கையாளப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் வழக்குகளை முறையாக வரைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கில் CBI தலையிட்டது, பாதிக்கப்பட்ட பெண்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், அரசியலமைப்பின் நம்பிக்கையை மணிப்பூரில் மீட்டெடுக்க வேண்டியதே தற்போதைய கடமைகளில் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டியது. மேற்குவங்கம், ராஜஸ்தானில் நடைபெறுவதைக் கூறி, மணிப்பூர் நிலையை மத்திய அரசு நியாயப்படுத்தக் கூடாது எனவும் ஒருபோதும் அதனை மன்னிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கடுமையாக தெரிவித்தனர். மேலும் மணிப்பூர் கொடூர வழக்கை மிக மோசமான முறையில் மத்திய மாநில அரசுகள் கையாண்டதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டு வாசலைத் தேடி நீதி சென்றடைய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

இதையும் படிக்க || நிலவின் சுற்றுப் பாதைக்குள் ‘சந்திரயான்-3’!!