மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்...!

காரைக்காலை சார்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல், ஐந்து பேர் படுகாயம் ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்...!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த இரண்டாம் தேதி இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 15 பேர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு இந்திய எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜ்குமாரின் படகை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர்.

மேலும் விசைப்படகில் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தினர். படகில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் ராஜ்குமார், தண்டபாணி, மதன், அருண்குமார், மாணிக்கவேல், சூர்யா ஆகிய ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். இன்று கரை திரும்பிய அவர்கள் காரைக்காலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் படகின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்கள் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.