பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர மோடி வலியுறுத்தல்!

பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர மோடி வலியுறுத்தல்!

பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை கடமை என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் ஜி-20 அமைப்புகளின் உறுப்பு நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர், நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவிலான சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர், பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை கடமை என்றார்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்று கூறிய பிரதமர், பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிக்க:வறுமையால் திருடிய பணிப்பெண்; மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்த நடிகை!