மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினாலும் பாஜகவின் சூழ்ச்சியால் நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் 3 வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்று கொண்ட மம்தா பானர்ஜி 6 மாத காலத்திற்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதையடுத்து மம்தாவுக்காக பவானிப்பூர் எம்எல்ஏ சோபனந்தேப் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிடுவதால் தேர்தல் களம் ரத்த களறியாக மாறியுள்ளது..
இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை நிறைவடைந்த நிலையில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தயாராக வைக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு லட்சம் மக்கள் வாக்களிக்கும் வகையில் 100 க்கும் மேற்பட்ட வாக்குசசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குப்பதிவு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாளை பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவு அறிவிக்கப்படும்.