முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.எஸ். அணை... மேட்டூர் அணைக்கான நீர் வரத்து குறைவு...
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 32 ஆயிரத்து 982 கனஅடியில் இருந்து 25 ஆயிரத்து 564 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள 124 புள்ளி 80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், அணையிலிருந்து காவிரியில் 3 ஆயிரத்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணை நிரம்பியுள்ளதை தொடர்ந்து இன்று மதியத்துக்குள் அதிப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரத்து 982 கன அடியிலிருந்து 25 ஆயிரத்து 564 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108 புள்ளி 72 அடியாக வும், நீர் இருப்பு 76 புள்ளி 60 டி.எம். சி,யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதிலும் கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில் அணைக்கு வரும் 125 கன அடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.