கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு மைல்கல்...

இந்தியாவில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு மைல்கல்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் இந்த திட்டம், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதனால் தடுப்பூசி திட்டம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, இந்த 12 மாத காலத்தில் நாட்டில் 133 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 577 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 81 கோடியே 74 லட்சத்து 54 ஆயிரத்து 502 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 52 கோடியே 13 லட்சத்து 58 ஆயிரத்து 75 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளும்  போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவில் தகுதி வாய்ந்தோரில் 55  சதவீததத்தினருக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிடுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றொரு மைல்கல்லை அடைந்துள்ளதாகவும்,  பிரதமர் மோடியின் வீடு தோறும் தடுப்பூசி திட்டம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் கூட்டுப்போரில் கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.