பிரதமருக்காக உயிரையும் கொடுப்பேன் : பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங்!!
பிரதமருக்காக உயிரையும் கொடுப்பேன் என பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்த பாஜக-வின் குற்றச்சாட்டுக்கு பாஞ்சாப் முதல்வர் பதிலளித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்தால் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பினார். நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காலை விமானம் மூலமாக செல்ல இருந்த பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக சென்றார். ஆனால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமரின் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு போராட்டக்காரர்கள் குவிந்ததால் பிரமரின் வாகனம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக சலையில் நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்து கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தவறிய பஞ்சாப் அரசுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது திட்டமிட்ட சதி எனவும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக-வின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பிரதமருக்காக தாம் உயிரையும் கொடுப்பேன் எனவும், பஞ்சாப்பில் பிரதமரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் கூறினார்.
இதனிடையே, பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு எழுந்துள்ள நிலையில் பெரோஸ்பூர் போலீஸ் எஸ்.பி ஹர்மன் ஹன்ஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.