கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவன்... போராடி போலீஸ் அதிகாரியான கேரள பெண்

கைக்குழந்தையுடன் விட்டு சென்ற கணவன்... போராடி போலீஸ் அதிகாரியான கேரள பெண்

கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனி சிவா. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது காதல் வயப்பட்டு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், அன்பிற்கு அடையாளமாக குழந்தையும் பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதத்தில் கணவன், மனைவி இடையே பிரச்சனை வெடித்த நிலையில், கை குழந்தையோடு கணவனைப் பிரித்துப் பெற்றோரைத் தேடி வந்தார் ஆனி. ஆனால் பெற்றோர் ஆனியை ஏற்க மறுத்துள்ளனர்.  

இதனையடுத்து தனது பாட்டியின் குடியிருப்புக்கு அருகே ஒரு சிறிய குடிசை ஒன்றை அமைத்து அதில் தனது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். கை குழந்தையை வைத்துக் கொண்டு உதவிக்கு யாரும் இல்லாமல் என்ன வேலைக்குச் செல்வது என்றும் தெரியாமல், வீட்டிலிருந்து கொண்டு மசாலா தூள் மற்றும் எலுமிச்சைப் பழ ஜூஸ்  விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

அவ்வளவு வறுமையிலும் தனது சமூகவியலில் பட்டப்படிப்பையும் படித்து முடித்தார். தனது மகன் சூரியாவுக்காக வாழ்ந்த ஆனி, ஆண்கள் போல முடி திருத்திக் கொண்டார். இந்தச்சூழ்நிலையில் தான் ஆனியின் நண்பர் ஒருவர், நீ ஏன் பெண்கள் எஸ்ஐ தேர்வில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார்.

ஆனால் ஆனி அதற்கு விருப்பம் இல்லை எனக் கூற, ஒரு முறை முயற்சி செய்து பார், பின்னர் பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை பார்க்கலாம் எனக் கூறி ஆனியைக் கடந்த 2014ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். வெற்றி பெற்று விட வேண்டும் என்ற உறுதியோடு கடினமாகப் படித்த ஆனி, கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். ஆனால் அதோடு நின்று விடாமல் 2019ல் மீண்டும் எஸ்.ஐ பதவிக்கான தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆனி சிவா வர்க்கலா பகுதியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த இடத்தில் தனது தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்காகக் கோவில்களில் ஐஸ்கிரீம் மற்றும் எலுமிச்சைப் பழ ஜூஸ் விற்றாரோ அதே பகுதியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார் ஆனி.

வாழ்க்கை முடிந்துவிட்டது என எண்ணாமல் அந்த சமயத்திலும் தனது கடின உழைப்பால் அதிகாரியாக,  காவல்துறை உடையில் கம்பீரமாக வந்த ஆனியைப் பார்த்து அவரது உறவினர்கள் வாயடைத்துப் போனார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கு துவண்டு போகாமல், யார் என அடையாளப்படுத்தி மற்ற  பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஆனி திகழ்ந்துள்ளார்.