காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு...!

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு...!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி:

கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும்  அடுத்தடுத்து காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவிய நிலையில், மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Inauguration-of-the-Chief-Justice-of-the-Supreme-Court

தலைவர்கள் விலகல்:

கபில் சிபல், அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், அஸ்வினி குமார் உள்ளிட்டோர் வரிசையில் காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தும் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் கட்சியுடனான 50 ஆண்டு கால தொடர்பை முறித்துக்கொண்ட குலாம் நபி ஆசாத், முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

காரிய கமிட்டி கூட்டம்:

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  சோனியா காந்தி, ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால், காணொலி காட்சி மூலம் இருவரும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அக்டோபர் 17:

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால், காங்கிரஸ்  தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.