முகமது புத்தகத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி...!!!!
இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் "முகமது" எனும் புத்தகத்தை எழுதிய சையத் வசீம் ரிஸ்வியை கைது செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சையத் வசீம் ரிஸ்வி என்பவர் எழுதிய "முகமது" எனும் புத்தகம் இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகவும், இந்திய இறையாண்மையின் ஒருமைப்பாட்டுக்கும், சமூக நல்லிணக்கம் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு எதிராக உள்ளதாகவும் இது இஸ்லாமிய மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த கூடும் என்பதால் பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாகவும் புத்தகம் எழுதிய சையத் வசீம் ரிஸ்வி மற்றும் யதி நரசிங்கானந்த் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 'இந்திய முஸ்லிம் ஷியா இஸ்னா அசாரி ஜமாத்' எனும் அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது.
இவ்வழக்கு இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வால் விசாரணை செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பில் 32வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தனி ஒரு நபர் எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்ய முடியாது எனவும் இத்தகைய முடிவு லலிதா குமாரி வழக்கில் நீதிமன்றத்தால் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி லலித் தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இஸ்லாமிய மதத்தினரை புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள முகமது எனும் புத்தகத்தின் நகலை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறினார்.
அப்போது நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்மறையாக பதில்கள் கூறப்பட்ட நிலையில் இவ்வழக்கில் மேற்கொண்டு விசாரிக்க ஏதும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறினார். இதனையடுத்து வழக்கு தொடர்பான மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவித்தது தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிக்க: மறக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா ஐஎன்எஸ் விக்ராந்த்தில் காங்கிரஸின் பங்களிப்பு....!!!!