4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நிலவரம்..!!

4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நிலவரம்..!!

இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அதேவேளையில் 4 மாநிலங்களில் சட்டமன்ற மற்றும் நாடளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்பின் ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதியில் 3 மணி நிலவரப்படி 40 புள்ளி 62 சதவீத வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. ஜலந்தர் உள்ளிட்டு 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்றபோது காங்கிரஸ் எம்பி சங்கோத் சிங் சவுத்ரி நெஞ்சுவலியால் உயிரிழந்த நிலையில், அவர் பதவி வகித்த ஜலந்தர் நாடாளுமன்ற தொகுதி காலியானது. தொடர்ந்து இன்று ஜலந்தர் தொகுதிக்க தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக, ஷிரோமணி அகாளிதளம் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி 40.62 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா அசாம் கானுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ராம்பூரின் ஸ்வார் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி 33.66 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தின் சப்னாய் தொகுதி எம்பியும் மதச்சார்பற்ற அப்னா தள கட்சியைச் சேர்ந்தவருமான ராகுல் கோல் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி கீர்த்தி கோலை இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் 3 மணி நிலவரப்படி 32.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  

ஒடிசாவில் உள்ள ஜர்சேகுடா தொகுதியின் எம்எல்ஏ காவல்துணை ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட  நிலையில், அத்தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் பிஜீ ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக போட்டியிடும் மும்முனைப் போட்டி இன்றைய தேர்தலில் நடைபெறுகிறது. 3 மணி நிலவரப்படி இத்தொகுதியில்  55.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இதேபோல, மேகாலயாவின் சஹியோங் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி...திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!