மது சாஷெட்டுகளாக விற்கப்பட்ட மெத்திலைக் குடித்து 21 பேர் பலி; குஜராத்தில் நடந்த சோகம்:
மது விலக்கு செய்யப்பட்ட மாநிலம் என்ற பெருமைக் கொண்ட குஜராத்தில் மது சாஷெட்டுகள் என விற்கப்பட்ட மெத்திலைக் குடித்து விட்டு, 21 பேர் இறந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
குஜராத் மாநிலத்தின் போடாட் பகுதியில், ‘ஹூச்’ என்ற மதுவின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட மது அருந்தியதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 18 பேர் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இறப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று (25 ஜூலை), குஜராத் மாநிலத்தில் உள்ள பர்வாலா தாலுகாவின் ரோஜிட் மற்றும், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமவாசிகள் பலர் திடீரென்று நோய்வாய்ப்பட்டனர். ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், மருத்துமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பே 16 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுமார் 30 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில், குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா, இந்த கள்ளச் சாராயத்தைத் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாவ்நகர் எல்லையின், காவல் துறை தலைவர் அசோக் குமார் யாதவ், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மதுபானங்களை விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை காவல் கண்காணிப்பாளரின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்படும் என்று கூறினார். குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.