தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ்

தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை, ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் செய்வதில்லை என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார். 
 
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
 
“தமிழ்நாட்டில் ஆவின் நல்ல வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.
 
மேலும்,  பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 3 மாதத்தில் 295 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் எங்கு கூட்டுறவு சங்கங்கள் இல்லையோ அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
 
தொடர்ந்து, பேசிய அவர் கடந்த 3 மாதத்தில் 31 ஆயிரம் மாடுகளுக்கு கடன் கொடுக்கப்பட்டு புதிதாக கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் அளவிற்கு இருந்த விற்பனை இந்தாண்டு 2 கோடியே 40 லட்சம் என்ற அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது எனவும்   கூறினார்.
 
ஆவினில் கடந்த மாதம் 6.9 சதவீதம் மின் சேமிப்பு இருந்துள்ளது என்று கூறிய அவர் ஆவின் லாபகரமான நிறுவனமாக விரைவில் வர இருக்கிறது என்றார்.
 
தொடர்ந்து பேசிய அவர் பொருட்கள் விற்பனை செய்வதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது எனவும், பால் உற்பத்தியாளர்கள் யாருக்கும் எங்கும் நிலுவை தொகை இல்லை என்றும் மிக தரமான பால் தர கூடியவர்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது விரைவில் செயல்படுத்தப்படும் எனவும்  கூறினார்.
 
மேலும்,  கொள்முதல் விலை உயர்த்துவது குறித்து அரசிடம் பேசி முடிவெடுக்கப்படும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை என்று கூறிய அமைச்சர், ஆவின் பொருட்களின் அளவிலும் தரத்திலும் எந்த சமரசமும் செய்வதில்லை, வரும் புகார்களை ஆய்வு செய்து சரி செய்து வருவதாகவும்  தெரிவித்தார்.
 
“ஆவின் நிர்வாகத்தில் இருக்கும் விஜிலென்ஸ் குழு தொடர்ந்து சோதனை செய்து வருவதாகவும், தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்கள் விலை குறைவாக தான் விற்பனை செய்யப்படுகிறது; பொது மக்களை கஷ்டப்படுத்தும் நோக்கில் ஆவின் என்றைக்கும் செயல்படாது; தீபாவளிக்கு தயாராகி விட்டோம்;  இந்த வருடம் நல்ல வரவேற்பு கண்டிப்பாக  மக்களிடம் இருந்து வரும்”, என பேசினார்....
 
ஆவின் லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் இல்லை என்று குறிப்பிட்ட அவர்,  “ஒரு கார்டை வைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 15 லிட்டர் வரை முறைகேடாக வாங்கியதை,  நானே செய்த ஆய்வில் கண்டறியப்பட்டது, அதனை கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்”,  என்று கூறினார்.
 
அதோடு,  “மறுசுழற்சி செய்யக்கூடிய பாக்கெட்டுகளில் தான் ஆவின் பால் வழங்கப்படுகிறது, தற்போது உடனடியாக பாட்டில்களில் பால் வழங்குவது கடினமான ஒன்று, அதற்காக பிளான்ட் எல்லாம் புதிதாக கட்ட வேண்டி இருக்கும், சராசரியாக ஒரு நாளைக்கு ஆவின் மூலம் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது, காலையில் பால் தாமதம் என்பது நிச்சியமாக இல்லை, நகரத்தில் 1.30 மணிக்குள் பால் கொடுக்கிறோம், ஆவினை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றுவது தான் எங்கள் எதிர்கால இலக்கு”, என கூறினார்..