பொன்னியின் செல்வனுக்கு டிக்கெட் இல்லையா? தியேட்டர் மேனேஜரின் மண்டையை உடைத்த போதையின் செல்வன்கள்...!

பொன்னியின் செல்வனுக்கு டிக்கெட் இல்லையா? தியேட்டர் மேனேஜரின் மண்டையை உடைத்த போதையின் செல்வன்கள்...!

பொன்னியின் செல்வனுக்கு டிக்கெட் கிடைக்காததால் போதை ஆசாமிகள் சிலர் தியேட்டர் மேனேஜரின் மண்டையை உடைத்துள்ளனர். 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இதில் இந்நாவலுக்கும் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டதற்கும் இடையில் முரண்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இத்திரைப்படத்தைப் பார்த்த கல்கியின் வாசகர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டே வெளியில் வந்தார்கள் என்றால் இங்கு ஒருவரது மண்டையே உடைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் சாத்தான்குளத்தில் உள்ள லட்சுமி திரையரங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். லட்சுமி திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான ஏப்ரல் 28  முதலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த 2-ம் தேதியன்று மதியம் 2.30 மணி காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் திரையரங்கத்துக்கு வந்துள்ளது. போதையில் வந்த அக்கும்பல் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு டிக்கெட் கேட்டுள்ளது.

ஆனால், தியேட்டர் ஊழியர் ஒருவர், படம் போட்டு நேரம் ஆகி விட்டதாகவும் அதனால் தற்போது டிக்கெட் வழங்க இயலாது எனவும் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கவே, திரையரங்க மேலாளர் முத்துவேல் அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்தவர்கள் அருகில் கிடந்த செங்கலால் முத்துவேலின் மண்டையை உடைத்தனர். உடனே அங்கிருந்தவர்களின் உதவியால் திரையரங்க மேலாளர் முத்துவேல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பொன்னியின் செல்வன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காததால் தண்ணியின் செல்வன்கள் மண்டையை உடைத்து மாவிளக்கு வைத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:கீழ்பவானி ஆற்றை கான்கிரீட் தளமாக மாற்றும் முயற்சி...! கைவிட சீமான் வலியுறுத்தல்...!!