பாண்டியர்கள் போல வந்த யாத்திசை...! ரசிகர்கள் வரவேற்பு...!!

பாண்டியர்கள் போல வந்த யாத்திசை...! ரசிகர்கள் வரவேற்பு...!!

கோவை கேஜி திரையரங்கில் பாண்டிய மன்னனின் வரலாற்றை பேசும் படமாக அமைந்துள்ள யாத்திசை திரைப்படம் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பட குழுவினர் சார்பில் இலவசமாக திரையிடப்பட்டது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் வரலாற்று படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சமீப காலமாக அதிகளவில் வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. 

இதுவரை வெளியான வரலாற்றுப் படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை. ஆனால் அவற்றுக்கெல்லாம் சவால் விடும் வகையில் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில்  யாத்திசை திரைப்படத்தை எடுத்து பிரம்மிக்க வைத்துள்ளனர்.

இவர் எடுத்த முதல் படத்திலேயே இப்படி ஒரு வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை தேர்வு செய்து ரிலீசுக்கு முன் அப்படக்குழு வெளியிட்ட டிரைலர், டீசர் முதல் ஸ்னீக் பீக் வீடியோ வரை அனைத்துமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

பாண்டிய மன்னனான ரணதீரனுக்கும், எயினர்களுக்கும் இடையேயான போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் 'யாத்திசை'. பெரும்பாலும் புதுமுகங்களே அதிகம் பணியாற்றியுள்ள இப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

பாண்டியர்கள் கதையுடன்  வெளியாகிய யாத்திசை திரைப்படத்தை, கோவை கே ஜி திரையரங்கில் பழங்குடியின மக்கள், பொதுமக்கள் என பலருக்கும் திரைப்பட குழுவினர் இலவசமாக திரையிட்டனர். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த ரசிகர்கள், ''இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டியாக முன்னோர் காலத்து பாண்டியர்களின் கதைகள்  இடம் பெற்றுள்ளது'' என உற்சாக வரவேற்பு அளித்தனர்.