"ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி பங்குதாரர் இல்லை" நீதிமன்றத்தில் தகவல்!
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்குதாரர் இல்லை நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஓ.எஸ்.டி பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் 'ஏஞ்சல்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 'ஏஞ்சல்' படத்தை முடித்து கொடுக்காமல் 'மாமன்னன்' திரைப்படம் வெளியிட தடை கேட்டு ஒ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 'ஏஞ்சல்' படத்திற்காக சுமார் 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் அந்த படத்தை உதயநிதி முடித்து கொடுக்கமால் 'மாமன்னன்' திரைப்படம் வெளியானால் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், 8 நாட்கள் உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் தனக்கு 25 லட்சம் ரூபாய் 25 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. ஏஞ்சல் திரைபடம் வெளியாகாவிட்டால், படத்தில் நடித்துள்ள மற்ற திரை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ரெட்ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் மூலம் தான் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக்கவும், 'ஏஞ்சல்' திரைப்படத்திற்கு ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தான் வாய்மொழி ஒப்பந்தம் செய்யபட்டதாகவும் வாதிட்டார் .
மேலும், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்குதாரர் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிக்க:"சீனர்களுடன் தொடர்பில் இருந்த இராஜேந்திர சோழன்" அகழாய்வில் தகவல்; அமைச்சர் பெருமிதம்!