ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி; சென்னைக்கு அதிரடி மாற்றம்!
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே தலைமையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது.
அப்போது இந்த வழக்கை சமீர் வான்கடே முறையாக விசாரிக்கவில்லை என்றும், அவர் ஆர்யான் கானை குற்றவாளி ஆக்குவதிலேயே குறியாக இருந்து வந்தார் என்றும், இந்த வழக்கின் மூலம் பலன் பெற முயற்சி செய்ததாகவும் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து சமீர் வான்கடே மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனிடையே ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான மற்றும் வைத்திருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் போதைப்பொருள் வழக்கில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில் ஆர்யன் கான் வழக்கை விசாரித்த சமீர் வான்கடே மீது தொடர்ந்து லஞ்ச புகார் உள்பட ஒரு சில புகார்கள் வந்ததையடுத்து அவரை தற்போது சென்னையில் உள்ள வரி செலுத்துபவர்களுக்கான சேவைகள் இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.