பகல் கொள்ளையில் இறங்கிய ரோகிணி திரையரங்கம்...!!
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் 28-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பல திரையரங்குகள் டிக்கெட் விலை என்ற பெயரில் கொள்ளை தொடங்கியுள்ளன. இதில் படுபயங்கர பகல் கொள்ளையில் இறங்கிய சென்னை கோயம்பேடில் உள்ள ரோகிணி திரையரங்கம் செய்தது என்ன?
சென்னை கோயம்பேடில் உள்ள ரோகிணி திரையரங்கம் தலைநகரின் முக்கிய பகுதியாக முக்கிய அடையாளமாகவே மாறிப் போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வந்தால் படக்குழுவினர், சினிமா பிரபலங்கள் பலரும் முன்பெல்லாம் பெரிய பெரிய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு செல்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக ரோகிணி திரையரங்குக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக படம் பார்த்து செல்கின்றனர். இந்த ஏற்றங்களே திரையரங்க நிர்வாகத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன.
இந்நிலையில் வரும் 28-ம் தேதியன்று பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாவதையொட்டி கடந்த திங்கட்கிழமை முதலே திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது. பிற திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த 190 ரூபாய் வசூலிக்கப்படுகிறதென்றால் ரோகிணியில் மட்டும் 380 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்த கொடுமைகள் எல்லாம் திரையரங்க கவுண்ட்டர்களில்தான் நடக்கிறதா என்று கேட்டால் அதுதான் இல்லை. ஆன்லைனிலேயே ஒரு டிக்கெட்டுக்கு உணவுடன் சேர்த்து 380 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்வதற்காக 35 ரூபாய் என மொத்தம் 416 ரூபாயை அடாவடியாக வசூல் செய்கிறது ரோகிணி திரையரங்கம்.
திரைப்படங்களை பார்க்க வருவோர், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுகளை சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது அவரவர் விருப்பம். ஆனால் ரோகிணியில் படம் பாக்க வருவோர் அனைவரும் கட்டாயம் அங்கு வழங்கப்படும் உணவை வாங்கியே ஆக வேண்டும் என்ற விதியை வகுத்துள்ளது.
ஏற்கெனவே திரையரங்குகளில் சாதாரண உணவை மும்மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது, பார்க்கிங் கட்டணத்தை மிகையாக வசூலிப்பதாக பார்வையாளர்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முன்பதிவிலேயே இப்படி கடுமையான நிபந்தனைகளை தொடங்கினால் இதே நிலையை அனைத்து திரையரங்க நிர்வாகமும் பின்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
ஒரு காலத்தில் புதிய திரைப்படத்தை திரையரங்குகளில் அல்லாமல் திருட்டு விசிடியில் பார்ப்பது எப்படி குற்றமோ? அதே போல திரையரங்குகள் சாமானிய மக்களை சுரண்டும் விதமாக செயல்படுவதும் கடும் குற்றமே? சில வாரங்களுக்கு முன்பு இதே ரோகிணி திரையரங்கம், நரிக்குறவர்கள் டிக்கெட் வாங்கியும் உள்ளே அனுமதிக்கப்படாத விவகாரம் இன்னும் தணியாத நிலையில் தன் அசுர வேட்டையை குறைக்காதது ஏன்? பட்டும் திருந்தவில்லையா இல்லை பாஜகவின் பின்புலமா?