விடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

விடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலக்குழி மரணம் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டு பேசினார். 

இந்த பேச்சு இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் அபிராமிபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர். 

இதையும் படிக்க : நீட் தோல்வி தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளுவதற்கு முற்றுப்புள்ளி எப்போது?

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி  விடுதலை சிகப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களின் நிலையை விளக்கும் வகையிலேயே கவிதை வெளியிட்டதாகவும், மத உணர்வுகளை எந்த விதத்திலும் புண்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், விடுதலை சிகப்பி மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.