மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரி சுவரொட்டிகள்!
போடிநாயக்கனூரின் முக்கிய பகுதிகளில் நாளை தமிழகமெங்கும் வெளியாகவிருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், உதயநிதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இத்திரைப்படம் நாளை (29.06.23 வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இத்திரைப்படம் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின்போது இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து பேசியது எதிர்ப்புகளை மேலும் அதிகமாக்கியது.
இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள முக்கிய பகுதிகளான கட்டபொம்மன் சிலை, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள வ உ சி சிலை, பார்க் நிறுத்தம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில்
மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
நாளை இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதையோட்டம் தமிழகத்தில் ஜாதி பிரச்சனைகளை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாகக் கூறி படத்தை தடை செய்யக்கோரி தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் போடி நாயக்கனூர் முக்கிய பகுதிகளில் படத்தை தடை செய்யக் கூறி கண்டன சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க:புலனாய்வு துறையிடம் சிக்குவாரா உளவுத்துறை ஏடிஜிபி? அதிரடி மாற்றமும் அதன் பின்னணியும்!