'மாமன்னன்' தடை கோரிய வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு..!

'மாமன்னன்' தடை கோரிய வழக்கு;   அவசர வழக்காக விசாரிக்க  நீதிபதிகள் மறுப்பு..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி முன்பு முறையீடு செய்யப்பட்டது.


திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில், "இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.

தற்போது தேவர் சமூகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகமும், கர்ணன் படத்தில் வந்த சம்பவங்களை மறந்து அமைதியான சூழலில் உள்ளனர்.

தற்போது உள்ள சமூகத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நினைவில் இல்லை. ஆனால் அதனை நினைவு கூறும் விதமாக கர்ணன் படம் இருந்தது.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம் மாமன்னன். இப்படம் ஜூலை 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது போல் தெரிகிறது.

மேலும் இப்படத்தில் நடித்துள்ள கதாநாயகர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (a) -க்கு எதிராக உள்ளது.   இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.  இப்படத்தை தடை விதிக்க கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும்,  இப்படத்தை திரையிலோ, எந்த OTT போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என்றும்,  திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், பேச்சு உரிமை, கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது எனவும் கூறினர்.

 அதோடு, திரைப்படம் என்பது மக்கள் பார்ப்பதற்காகவே என்றும்,  இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள் எனவும், குறிப்பிட்டார். அதையும் மீறி ஏதேனும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள் என்று கூறி இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதையும்  படிக்க    | மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரி சுவரொட்டிகள்!