லியோ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை!

லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா நடித்திருக்கும் லியோ படமானது நாளை உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக 1246 இணையதளங்களில்  வெளியிடுவதை தடை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் ஸ்டியோ நிறுவனத்தின் இயக்குனர் லலித்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, லியோ திரைபடமானது நாடு முழுவதும் ஆயிரத்து 500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.  

இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கும்  உத்தரவிட்டுள்ளார்.