அண்ணா சாலையில் 2வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட்...!!
பரபரப்பாக இயங்கும் சென்னை அண்ணா சாலையில் தொடர்ந்து 2வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.
சென்னையில் முக்கிய பகுதிகளான தி நகர் , பெசன்ட் நகர் ,அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பரபரப்பான சூழலில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே, இவற்றையெல்லாம் மறக்க ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய "போக்குவரத்து இல்லா சாலை" எனும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்று வரும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது விடுமுறை தினமான இன்று அண்ணா சாலையில் கலை கட்டியது. எப்பொழுதும் சாலையில் வாகன சத்தங்களுடன் பரபரப்பாக இயங்கும் அண்ணா சாலையானது தொடர்ந்து 2வது வாரமாக இன்று காலை மக்கள் கூட்டத்தில் மகிழ்ச்சியாக காணப்பட்டது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே, கோலம் போட்டி, பாட்டுப் போட்டி, நடனம், யோகா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. மேலும் டேபிள் டென்னிஸ்,கூடைப்பந்து, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளும் இங்கு இளைஞர்கள் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் விளையாடினர். ஊரகப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் போல சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில கலந்துகொண்ட பொதுமக்கள், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியானது என்றும் வரவேற்கத்தக்கது என்றும் கூறுகின்றனர். மேலும், வார நாட்களில் தொடரும் வேலைப்பளுவிற்கு இடையே தங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியும் தருவதோடு மகிழ்ச்சியையும் தருவதாக இங்கு வந்தவர்கள் தெரிவித்தனர். 5வாரங்கள் அண்ணா சாலையில் ஹேப்பிஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ந்து 2வது வாரமாக மக்களின் மகிழ்ச்சி ஓசையில் அண்ணா சாலை கொண்டாட்ட களமாக மாறியுள்ளது.
இதையும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??