'வாச்சாத்தி' கதையை திருடியதா 'விடுதலை' படம்?
வாச்சாத்தி படத்தின் கதையை திருடி விடுதலை படம் எடுக்கப்பட்டதாக இயக்குனர் ரவி தம்பி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குமாரி டாக்கீஸ் நிறுவனத்தை துவக்கி 'வாச்சாத்தி' என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரவி தம்பி. வாச்சாத்தி படத்தை பொறுத்தவரை வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 18 பெண்களை விசாரித்து அதன் அடிப்படையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் வாச்சாத்தி படத்தை இயக்கி உள்ளதாக இயக்குநர் ரவி தம்பி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ரவி தம்பி கூறியதாவது, "கடந்த 1992 ஆம் ஆண்டுகளில் வீரப்பனை பிடிக்க செல்லும் பொழுது வாச்சாத்தி என்னும் இடத்தில் 18 பெண்களை காவல்துறை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு என்னிடம் கூறினார். மேலும் வாச்சாத்தி வன்கொடுமை குறித்தும் அதை நீங்கள் படமாக எடுக்கலாமே என்றும் அவர் என்னிடம் சொன்னார். சரி அப்படி எடுத்து நம்மால் முடிந்த நன்மைகளை செய்யலாம் என்று நினைத்து, வாச்சாத்தி படத்தை நான் பல சிரமங்களுக்கு மத்தியில் எடுத்தேன். படத்தை துவங்கிய நாள் முதல் பல போராட்டங்கள் இருந்தன. ஒரு பக்கம் வன அலுவலர்கள் தொல்லை. மறுபக்கம் போலீஸ் தொல்லை. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே படப்பிடிப்பி நடத்த உரிய அனுமதி உள்ளதா என்று கேட்டு அதிகாரிகள் வருவார்கள். படப்பிடிப்பை நிறுத்துவார்கள். அதையும் தாண்டி தான் நான் இந்த படத்தை எடுத்தேன்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வாச்சாத்தி படத்தில் பல காட்சிகளை தனிக்கை செய்து விட்டனர் என்றும் அவர்கள் பெரிய இடம் அதனால் தான் தனிக்கை துறையினர் கூட சில காட்சிகளை நீக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும், படம் வெளிவந்த நேரத்தில் தான் கிராமத்தில் இருந்ததாகவும், அதனால் அப்போது தனக்கு தெரியவில்லை எனக் கூறிய அவர் இந்த படத்தில் வரும் நிறைய காட்சிகள் தனது படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று பிறகு தான் தெரிந்தது எனக் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.